Follow by Email

Monday, December 17, 2007

ஆரோக்கியத்தின் ஆணிவேர் அது உங்கள் மருத்துவ அறிவு

மருத்துவக் கட்டுரைகள் : வழங்குபவர் : டாக்டர் எம்.கே.முருகானந்தன்


மறதி நோய்

பிளக் ஹிந்திப் படம் பார்த்திருக்கிறீர்களா? படத்தின் இறுதிப் பகுதியில் அமிதாப் பச்சானுக்கும் வருகிறதே ஒரு நோய். தனக்கு மிக நெருக்கமான , தனது நீண்ட அயராத கற்பித்தல் முயற்சியால் உருவாக்கிய பார்வையற்ற மாணவியைக் கூட இனங்காண முடியாத நோய் .மறதி நோய்!.அண்மைக்கால சம்பவங்களை மறத்தலில் ஆரம்பித்து பின் குழப்ப நிலையை அடைந்து இறுதியில் மோசமான முடிவுகளை எடுக்க வைக்கிற நோய். இதனை, படிப்படியாக ஆரம்பித்து மூளையை நலிவடையச் செய்து மீளமுடியாத நிலைக்குச் செல்கின்ற (சிகிச்சையால் குணப்படுத்த முடியாத)`முதுமை மறதிப் பைத்தியம்' எனலாம். அது தான் அல்ஸீமர் நோய்.வயதான காலத்தில் ஏற்படும் நினைவிழப்பு மற்றும் சிந்தனைத் திறன் இழத்தல் எனவும் சொல்லலாம். இது பொதுவாக 65 க்கு மேற்பட்டவர்களுக்கே வரும் நோயாயினும் சில வேளைகளில் நடுத்தர வயதினருக்கும் தோன்ற வாய்ப்புண்டு. 80 வயதிற்கு மேற்பட்டோரில் 22 சதவிகிதமானவர்கள் இந் நோயால் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் இது மூளையில் ஏற்படும் நோயே அன்றி வழமையான வயது முதிர்வதால் ஏற்படுவதில்லை.அல்ஸீமர் நோயல்லாத வேறு 'நினைவு மங்கும் நோய்'களும் உள்ளன. `அறளை பெயர்தல்' என்ற சொல் கூட இவற்றிற்குப் பொருந்தலாம்.ஏக்கம், கலக்கம், செய்ததை மீண்டும் மீண்டும் செய்தல், காரணமின்றி அலைதல், தூக்கமின்மை, சத்தமிடுதல் போன்றவை இவர்களது சில அறிகுறிகளாகும். மிகுந்த பதற்றப்படுபவர்களாகவும், பாதுகாப்பு உணர்வு அற்றவர்களாகவும் மாறுகின்றனர்.மனக் குழப்பமும் ஏற்படுகிறது. இதனால் அவர்களைக் கட்டுப்படுத்துவதும் கடினமாகிறது. கிராமங்களில் அவர்களை ஓரளவு சமாளிக்க முடிந்தாலும், தொடர் மாடி வீடுகளில் இவர்களை வைத்திருப்பது ஏனையோருக்கு இடைஞ்சல் ஏற்படுத்துவதாகிறது. இதனால் இந்த நோயானது நோயளர்களை மாத்திரம் துன்புறுத்துவதில்லை. அவர்களது குடும்பத்தவர்களையும் பராமரிப்பவர்களையும் மிகுந்த துன்பத்திற்கு ஆளாக்குகிறது.இந்த நோயை வைத்தியர்கள் நோயின் வெளிப்படையான அறிகுறிகளை வைத்து, நோயாளியின் அறிவார்ந்த செயற்பாடுகளைக் கணக்கெடுத்து, தங்களது அனுபவ அறிவைக் கொண்டு தான் கண்டு பிடிக்க வேண்டியிருக்கிறது. எயிட்ஸ் நோய்க்கு செய்வது போலவோ, நீரிழிவுக்கு செய்வது போலவோ, ஏனைய பல நோய்களுக்குச் செய்வது போலவோ இரத்தப் பரிசோதனை மூலம் கண்டுபிடிக்க முடியாது.மருத்துவ நோய் நிர்ணயத்திற்கு அனுபவ அறிவைக் கொண்டு அல்லது அறிகுறிகளை மட்டும் வைத்துக்கொண்டு கண்டு பிடிப்பதனால் தவறுகள் ஏற்பட வாய்ப்புண்டு. இத்துடன், நோயின் ஆரம்ப நிலையில் கண்டுபிடிப்பதும் முடியாததாகும். சீரி ஸ்கான் மற்றும் மூளை மற்றும் முண்நாணுக்குள் இருக்கும் Cerebro Spinal Fluid ஆகியவற்றை எடுத்துப் பரிசோதித்தல் போன்றவை சில காலமாக பயன்பாட்டில் இருந்த போதும் அவையும் மிகச் சரியான முடிவுகளை நேரகாலத்துடன் கொடுப்பதில்லை.இப்பொழுது ஒரு எயிட்ஸுக்கு செய்வது போல எலிசா ( Elisa- enzyme- linked immunoaorbent assay) பரிசோதனை ஒன்றைக் கண்டு பிடித்துள்ளார்கள்.எப்படி இந்தப் பரிசோதனையைக் கண்டுபிடித்தார்கள்?அல்ஸீமர் நோயுள்ள 85 பேரினதும் ஆரோக்கியமான 79 பேரினதும் குருதியை எடுத்து அதன் பாயத்தில் உள்ள புரதங்களை நுணுக்கமாக ஆராய்ந்தார்கள். முக்கியமாக இந்நோயை இனங்காணக்கூடியவை என நம்பப்பட்ட 120 புரதக் கூறுகளை ஆராய்ந்த போது அதில் 18 புரதக் கூறுகள் அல்ஸீமர் நோயாளிகளின் குருதியில் மட்டும் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.இப்பொழுது ஆராய்ச்சி அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது. அதாவது இந்தப் புரதங்களை அடிப்படையாகக் கொண்டு ஒருவருக்கு அல்ஸீமர் நோய் இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டுபிடிப்பதற்கான இலகுவான பரிசோதனை முறை உருவாக்கப்பட்டது.அந்தப் பரிசோதனை முறை எந்தளவு நம்பிக்கையானது?அல்ஸீமர் நோயாளர்களை 90 சதவிகிதம் துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியும் என ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. அது மட்டுமல்ல மிகக் குறைந்தளவு அறிவார்ந்த செயற்பாட்டுக் குறைபாடுகள் உள்ளவர்களின் இரத்தங்களைப் பரிசோதித்த போது அல்ஸீமர் நோய் வருவதற்கு 2-5 வருடங்கள் முன்னதாகவே இப்பரிசோதனை மூலம் கண்டுபிடிக்க முடிந்திருக்கிறது.வெளிப்படையான அறிகுறிகள் தெரிவதற்கு முன்னரே இந்நோயைக் கண்டுபிடிப்பது மிகப்பெரிய முன்னேற்றம் என்பதில் சந்தேகமில்லை. ஆயினும், இந்த ஆய்வு முடிவுகள் பரிசோதனை முறையைக் கண்டுபிடித்த நிறுவனம் சொல்கின்றனவாகவே இருக்கின்றன. தனிப்பட்ட ஆய்வு முடிவுகள் வரும் வரை காத்திருக்க வேண்டியது தான்.அல்ஸீமர் நோயால் 40 இலட்சம் பேர் உலகளாவிய ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. நேர்த்தியான சிகிச்சை முறை அல்லது நோயைத் தடுக்கும் முறை கண்டு பிடிக்கப்படாவிட்டால் 2050ம் ஆண்டளவில் இது 140 இலட்சமாக அதிகரிக்கும் என எதிர்வு கூறப்படுகிறது. அமெரிக்காவில் மரணங்களுக்கான காரணங்களில் இது நான்காவதாக முன்னணியில் இருக்கிறது.